Search This Blog

Showing posts with label அகத்தி. Show all posts
Showing posts with label அகத்தி. Show all posts

22 April 2012

கருவளையமா? – எளிய தீர்வு அகத்தி!

முகத்தின் தன்மையைப் பொருத்து அதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம், சாதாரண சருமம் என மூன்று விதமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு சருமத்துக்கென பிரத்யேக குணங்கள் இருக்கும் என்பதால் அதற்கேற்ற மாதிரிதான் பராமரிப்பும் இருக்க வேண்டும். ஒரு சருமத்துக்கு ஒத்துக்கொள்வது இன்னொரு வகை சருமத்துக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

வறண்ட சருமத்தை வழவழப்பு சருமமாக மாற்ற இரண்டு பிஞ்சு வெண்டைக்காய், ஒரு சின்ன கேரட், சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு விழுதுபோல நைஸாக அரைக்கவும். இதை முகத்தில் பேக் போல போட்டு அரை மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகம் மெருகேறும். இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும்.

கண்களுக்குக் கீழே கருவளையம் இருப்பவர்கள் அகத்திக்கீரையை சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால் தோல் பிரச்சினைகள் இருக்காது. அதோடு கருவளையமும் காணாமல் போகும். மேல் உதடு ஒரு நிறமாகவும், கீழ் உதடு ஒரு நிறமாகவும் இருப்பவர்கள் சீமை அகத்திக்கீரை, பச்சைப் பயறு சேர்த்து அரைத்துத் தடவினால் உதடுகளின் நிறம் ஒரே மாதிரியாக மாறிவிடும்.

வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை சாப்பிடக் கூடாது. தினமும் பாதாம், முந்திரி, வேர்க்கடலை என மூன்று வேளையும் ஏதாவது ஒரு பருப்பை ஒரு வேளைக்கு இரண்டு என சாப்பிட்டு வர, உடலின் பல பிரச்சினைகள் தீரும். கீரை வகைகள் மற்றும் பழங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு முல்தானிமெட்டியுடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவலாம். பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவிவந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பொலிவுபெறும்.

சாதாரண சருமத்துகென பிரத்யேகமாக எதுவும் செய்யத் தேவையில்லை. எப்போதும் போல முகத்தைப் பராமரித்து வந்தாலே போதும். கன்னங்கள் ஒட்டிப்போய் இருப்பவர்கள், சாமந்திப் பூ, சிறு பருப்பு சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் கன்னங்கள் உப்பி வரும்.